புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீங்க! வனத்துறையினர் எச்சரிக்கை
வால்பாறை,; ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, வனத்துறையினர் சுற்றுலா பயணியருக்கு எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இதனை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கடந்த, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பயன்படுத்த அரசு தடை விதித்தது. ஆனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும், வால்பாறையில் சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்களை, உணவுப்பொருட்களோடு வனப்பகுதியில் வீசி செல்வதால், அதை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுலா பயணியர், ஆழியாறு, அட்டகட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.அதே போல், வால்பாறை கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே நின்று, வரையாடு, சிங்கவால்குரங்கு போன்ற வனவிலங்குகளோடு 'செல்பி' எடுப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.
கண் துடைப்பு ரெய்டு!
வால்பாறையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. பெட்டிக்கடை முதல் மளிகை கடை வரை பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.உள்ளூர் மக்களை தவிர, வெளியூரிலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றனர். தடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள், 'ரெய்டு' என்ற பெயரில் கண் துடைப்புக்காக சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.அதேபோன்று, ஆழியாறு, சோலையாறு டேம் ஆகிய இரு நுழைவுவாயிலிலும் வனத்துறையினர் தீவிர சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கினால் மட்டுமே, வால்பாறை நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.