உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலையில் முடிந்த 10 நாள் பழக்கம் வாலிபரை கொன்ற போதை நபர் கைது

கொலையில் முடிந்த 10 நாள் பழக்கம் வாலிபரை கொன்ற போதை நபர் கைது

கோவை: மதுபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டியவரை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலுார் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்த விஜய், 29, என்பவரின் மனைவியும், தஞ்சாவூரை சேர்ந்தவர் விக்னேஷ், 23, என்பவரின் மனைவியும் பிரசவத்துக்காக, கோவை அரசு மருத்துவமனையில், 10 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர், கோவையில் கூலி வேலை செய்து வரும் விஜய், விக்னேஷ் இடையே மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு முன் இருவரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜய், விக்னேஷை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். இதில், விக்னேஷ் கோபம்அடைந்தார். இந்நிலையில், விக்னேஷின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அவர்கள் வீடு திரும்பினர். விக்னேஷ்க்கு விஜய் மீது, கோபம் தொடர்ந்து இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனையில் விக்னேஷ், விஜய்யை சந்தித்தார். அவரை தனியாக அழைத்துச் சென்று, தகாத வார்த்தைகளால் திட்டியது குறித்து கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், விஜய் மார்பில் விக்னேஷ் குத்தினார். அருகில் இருந்தவர்கள், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தும் விஜய் உயிரிழந்தார். விக்னேஷை பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, விக்னேஷை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ