அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் முடிந்த பின்பு சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அரங்கநாதர் வெண்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ, மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகாதீப ஆராதனை நடந்தது. முடிந்த பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், செயல் அலுவலர், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.