ஓட்டு வீட்டில் வசிக்கும் முதியவர் பழைய சொத்து வரி செலுத்த உத்தரவு
கோவை: கோவை, காந்திபுரம் எட்டாவது வீதியில் வசிப்பவர் காவலாளி பழனிசாமி, 76. இவரது ஓட்டு வீட்டுக்கு, 2,182 ரூபாய் சொத்து வரி செலுத்தி வந்தார்.'ட்ரோன்' சர்வே செய்தபோது, வணிகப் பகுதியாக கணக்கிட்டு, 5,177 சதுரடி இருப்பதாக குறிப்பிட்டு, ஓராண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சொத்து வரி நிர்ணயித்து, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. நமது நாளிதழில் செய்தி வெளியிட்டதும், வருவாய் பிரிவினர் விசாரணை நடத்தினர்.ஓட்டு வீடு மற்றும் அருகாமையில் உள்ள வணிக கட்டடங்களுக்கு, 'காளியப்ப கவுண்டர்' என்கிற பெயரில் ஐந்து வரி விதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இரு வரி விதிப்புக்கு பழனிசாமியும், மூன்று வரி விதிப்புக்கு, அவரது சகோதரரும் சொத்து வரி செலுத்துகின்றனர்.'ட்ரோன்' சர்வே செய்த ஊழியர்கள், ஓட்டு வீட்டுக்கு அருகே இருந்த வணிக பயன்பாட்டுக்கான மூன்று மாடி கட்டடத்தின் சொத்து வரியையும், ஓட்டு கட்டடத்துக்கான சொத்து வரி புத்தகத்தில், பதிவேற்றம் செய்திருக்கின்றனர். துணை கமிஷனர் குமரேசன் தலைமையில் விசாரணை நடத்தியபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, உயர்த்தப்பட்ட சொத்து வரியை நீக்கவும், பழைய வரியை செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். இத்தகவலை, முதியவர் வீட்டுக்கு, மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று கூறியதோடு, பழைய சொத்து வரியையே செலுத்தவும் அறிவுறுத்தினர்.