உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்ட் ஆபீசை சூறையாடிய யானைகள்

போஸ்ட் ஆபீசை சூறையாடிய யானைகள்

வால்பாறை;வால்பாறை அருகே, போஸ்ட் ஆபீசுக்கு இரவு நேரத்தில் வந்த யானைகள், பொருட்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா(டான்டீ) தேயிலை தோட்டம். இங்கு கடந்த ஒரு மாதமாக யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சின்கேனா (டான்டீ) முதல் பிரிவு போஸ்ட் ஆபீஸ் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், போஸ்ட் ஆபீஸ் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியதோடு, உள்ளே இருந்த பொருட்களையும் வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.அருகில் உள்ள குடியிருப்பையும் யானைகள் இடித்து சேதப்படுத்தின. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இது குறித்து போஸ்ட் மாஸ்டர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில், வனத்துறை மற்றும் டான்டீ அதிகாரிகள் சேதங்களை நேரில் பார்வையிட்டனர்.

வகுப்பறை சேதம்

சின்கோனா(டான்டீ) லாசன் டிவிஷனில் முகாமிட்ட யானைகள், இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறை கதவு, ஜன்னல்களை இடித்து சேதப்படுத்தின.நள்ளிரவில் யானைகள் பள்ளி வளாகத்துக்கு வந்ததால், விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறினர். பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சேதமடைந்த வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டனர்.

விளையாட்டு

மேலும், சின்கோனா, பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் யானைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளன. தொழிலாளர் குடியிருப்பு வழியாக பகல் நேரத்தில், தாய் யானையுடன் நடந்து சென்ற குட்டி யானை, சரிவான மலைப்பாதையில் சறுக்கியபடி சம தளத்துக்கு சென்று வழக்கம் போல் நடந்து சென்றது. குட்டி யானை சறுக்கி விளையாடியதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை