அணை நீர்மட்டம் உயர்வால் மனம் குளிர்ந்த விவசாயிகள்
வால்பாறை; பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில், தென்மேற்குப் பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்கிறது. இடையிடையே வெயில் நிலவி வந்த நிலையில், கடந்த, 20 நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், இடைவிடாமல் கனமழை பெய்கிறது.இதனால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, கெஜமுடி டனல் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.காற்றுடன் கனமழை நீடிப்பதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பருவமழை தீவீரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 142 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,703 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 863 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது.இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 42.34 அடியாக உயர்ந்தது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகளின் மனமும் குளிர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 100, பரம்பிக்குளம் - 60, ஆழியாறு - 54, வால்பாறை - 79, மேல்நீராறு - 112, கீழ்நீராறு - 90, காடம்பாறை - 17, சர்க்கார்பதி - 40, வேட்டைக்காரன்புதுார் - 28, மணக்கடவு - 22, துாணக்கடவு - 25, பெருவாரிப்பள்ளம் - 30, நவமலை - 14, பொள்ளாச்சி - 6 என்ற அளவில் மழை பெய்தது.