உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலைய அணுகு சாலைகளை இணைக்க நடவடிக்கை; விவசாயிகள் வலியுறுத்தல்

விமான நிலைய அணுகு சாலைகளை இணைக்க நடவடிக்கை; விவசாயிகள் வலியுறுத்தல்

சூலுார்; விமான நிலைய அணுகு சாலைகளை, பிரதான ரோடுகளுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சின்னியம்பாளையம் விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து, முன்பு கலெக்டராக இருந்த உமாநாத், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தகுந்த இழப்பீடும், எஞ்சியுள்ள நிலத்துக்கு செல்லும் வகையில், இரு புறமும், 10 மீ. சர்வீஸ் ரோடுகள் அமைத்து தர உறுதி அளித்திருந்தார். அதன் காரணமாக, பிளாக் எண். 2, 19, 20, 21, 23 ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணுகு சாலையை பயன்படுத்தி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை வழங்கினர். ஆனால், அணுகு சாலைகள் அமைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அணுகு சாலை அமைத்து, அதை பிரதான ரோடுகளுடன் இணைக்க வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. பிளாக் 2 ல் அமையும் அணுகு சாலையை, இருகூர் மகாத்மா காந்தி ரோடு, எஸ்.ஐ.எஸ்.எச் காலனி ஏர்போர்ட் ரோடு ஆகியவற்றுடன் இணைந்து, திருச்சி ரோட்டுடன் இணைக்க வேண்டும். எஸ்.ஐ. எஸ்.எச்., காலனியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் திட்ட சாலை வழியாக அவிநாசி ரோட்டையும் இணைக்க வேண்டும். இவ்வாறு, அணுகு சாலைகளை அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டுடன் இணைப்பதன் வாயிலாக ஒண்டிப் புதூரில் அமைய உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு எளிதில் செல்ல முடியும். அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். எனவே அணுகு சாலையை மாநில அரசே தன் வசம் வைத்துக்கொண்டு, மேம்பாட்டு பணிகளை செய்தால், சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ஒரு சேர வளர்ச்சி அடையும். இதுகுறித்து வரைபடத்துடன் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை