உழவர் நல சேவை மையம் சிக்கலாம்பாளையத்தில் துவக்கம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தில் உழவர் நல சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் பட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில், உழவர் நல சேவை மையம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் பகவதிராஜ் என்பவர், உழவர் நல சேவை மையத்தை துவங்கியுள்ளார். இந்த நிகழ்வில், கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், தோட்டக்கலை அலுவலர் இலக்கியா, உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இங்கு, விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வினியோகம் செய்தல், விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் உழவர் கடன் அட்டை பெற உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.