போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம்; சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கும் உத்தரவு
கோவை, : மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, சட்டம் ஒழுங்கு போலீசாரும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை, அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதற்கு ஏற்றவாறு, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகின்றன.சாலை விபத்துகளை குறைக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, அபராதம் விதித்து வந்தனர்.இந்நிலையில், தற்போது போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையிலும், மாநகரில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ.,க்கள் மற்றும் இன்ஸ்.,கள் அந்தந்த பகுதிகளில், வாகன தணிக்கை செய்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அபராதம் விதிக்கும் கருவியை பயன்படுத்தி, அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநகரில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல், அதிவேகம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, விதிமீறல்களை தடுக்க முடியும் என, அதிகாரிகள் நம்புகின்றனர்.