உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புளிய மரத்தில் மோதிய கார் ஐந்து வாலிபர்கள் உயிரிழப்பு

புளிய மரத்தில் மோதிய கார் ஐந்து வாலிபர்கள் உயிரிழப்பு

தொண்டாமுத்துார்: கோவை, சிறுவாணி மெயின் ரோட்டில், அதிவேக கார், புளியமரத்தின் மீது மோதிய விபத்தில், 5 பேர் பலியாகினர். தஞ்சாவூரை சேர்ந்தவர் ஹரிஷ், 21. கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள வாட்டர் வாஷ் மற்றும் வாகனம் பார்க்கிங் சென்டரில் தங்கி, பணிபுரிந்து வந்தார். இவருடன், சபரி அய்யப்பன், பிரகாஷ் ஆகியோர் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஹரிஷ் பிறந்தநாளை கொண்டாட, நண்பர்கள் சபரி அய்யப்பன், பிரகாஷ், வேளாண் பல்கலையில் தோட்டக்கலை மூன்றாமாண்டு படித்து வரும் பிரபாகரன், 19, அகத்தியன், 20, ஆகியோர் முடிவு செய்தனர். தன் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த, தேனியை சேர்ந்த முத்துச்செல்வன் என்பவரின் காரில் ஏறி அனைவரும் ஜாலியாக புறப்பட்டனர். காரை ஹரிஷ் ஓட்ட, இடதுபுறம் பிரகாசும், பின் சீட்டில் பிரபாகரன், சபரி அய்யப்பன், அகத்தியன் ஆகிய மூவரும் அமர்ந்திருந்தனர். இருட்டுப்பள்ளத்தில் உள்ள பேக்கரியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட சென்றனர். பேரூர், செட்டிபாளையம், பெட்ரோல் பங்க் எதிரே கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், ஹரிஷ், சபரி அய்யப்பன், பிரகாஷ் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகத்தியன், பிரபாகரன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே அகத்தியன் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் கூறுகையில், 'விபத்தில், காரில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள புளிய மரத்தில், ஏராளமான வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதால், அந்த மரத்தை அகற்ற மாநில நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ