வனப்பகுதியை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்; 'வனங்களிலிருந்து ஆறு உற்பத்தி ஆகிறது. எனவே வனப்பகுதிகளை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்' என, மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு பேசினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உலக வன தின விழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ் வேந்தன் தலைமை வகித்தார். மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு பேசியதாவது: வனப்பகுதிகளில், 3,200க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் உள்ளன. 45 சதவீதம் மக்களுக்கு வனத்தில் இருந்து தான் தண்ணீர் வருகிறது. கேரளாவில் உள்ள, 66 ஆறுகள் வனப்பகுதிகளில் உற்பத்தி ஆகின்றன. வனப்பகுதிகளையும், ஆறுகளையும் மக்கள் நம்பி உள்ளனர். எனவே வனப்பகுதிகளை நாம் அதிகரிக்க வேண்டும். நாட்டில் உள்ள, 32 சதவீத பழங்குடியின மக்களில், 15 சதவீத மக்கள், வனப்பகுதியில் விளையும் பொருட்களை உணவாக சாப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தமது அம்மாவின் பெயரால் ஒரு மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். தற்போது, 33 சதவீதமாக உள்ள வனப்பகுதி, ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகள் நடுவதன் வாயிலாக, 50 சதவீதமாக வனப்பகுதி மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வனக்கல்லூரி முதல்வர் நிஹார் ரஞ்சன் வரவேற்றார். வனவியல் துறை பேராசிரியர் சேகர், டெல்லி ஆற்றல் வள மேலாண்மை நிறுவன இணை இயக்குனர் சையது ஆரீவ் வாலி வனக்கல்லூரி பேராசிரியர் பார்த்திபன் உட்பட பலர் பேசினர். தன்னார்வ கார்பன் சந்தைக்கான வேளாண் காடு வளர்ப்பு என்ற கொள்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வனச் சட்டம் கிராமப்புற முன்னேற்றம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் கல்லுாரி மாணவர்கள் தன்னார்வலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் காடுகள் துறை தலைவர் உமேஷ் கண்ணா நன்றி கூறினார்.