சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில் குப்பைக்கூளம்
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும், மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தின் நிலை படுமோசமாக உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு, போதுமான கழிவறை வசதி கூட இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்டடத்தில், தரைத்தளத்தில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம், தாய் - சேய் நலக்கண்காணிப்பு, உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இக்கட்டடத்தின் பின்புறம் காசநோய் அலுவலகம், மருந்து குடோன் , வாகனங்கள் பணிமனை போன்றவை உள்ளன. நடமாடும் வாகனங்களுக்கு தேவைப்படும் மருந்துகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு தேவைப்படும் மருந்துகள், இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றன. மருந்து, குப்பை கூளங்கள்
வளாகம் முழுவதும் காலாவதியான மருந்துகள், உணவு பகுப்பாய்வு செய்யப்பட்ட கெட்டுப்போன உணவு பொருட்கள், கெமிக்கல் பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மருத்துவ உபகரணங்களுடன் வரும் தெர்மாகோல், மது பாட்டில்கள் கொட்டப்படுகின்றன. மருந்துகள், கெட்டுப்போன உணவு பொருட்கள், கெமிக்கல் போன்றவற்றை எரிப்பதால், அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். பயன்படுத்திய நாப்கின், எரிக்கப்பட்ட கெமிக்கல் பாட்டில், திறந்த நிலையில் மூடப்படாத பழைய பெரிய தொட்டிகள், கண்டம் செய்யப்பட வேண்டிய வாகனங்கள், புதர் மண்டிய இடங்கள் என உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பிற அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்களின் குடியிருப்புகளில், சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற உத்தரவிடும் அதிகாரிகள், தங்கள் அலுவலகத்தில் சுகாதாரத்தை, சரிவர பின்பற்றுவதில்லை.ஊருக்கு மட்டும்தான் உபதேசம் போல!கழிவறை வசதிகள் ஏற்படுத்த கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன. நிதி கிடைத்தவுடன் கூடுதலாக கட்டப்படும்.- பாலுசாமிதுணை இயக்குனர், மாவட்ட சுகாதரத்துறை
அவசரத்துக்கு 'அடக்கணும்'
இந்த வளாகத்தில், 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றனர். ஆனால், இங்கு சரியான கழிவறை வசதி போதுமான அளவில் இல்லை. ஆண், பெண் அலுவலர்கள் ஒரே கழிவறையை பயன்படுத்தும் சூழல் உள்ளது. உயர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரிகளுக்கும் இதே நிலைதான். இதை தவிர, இங்கு பயிற்சிக்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும் வந்து செல்வோர் நிலை பரிதாபம். 'அவசரத்துக்கு' எங்கும் செல்ல முடியாது. பெண்கள் பயன்படுத்தும் தரைத்தள கழிவறை ஒன்றில், ஜன்னல் பிளாஸ்டிக் கவர் வைத்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது.