மாரடைப்பில் தவித்த பயணிக்கு உதவிய அரசு பஸ் ஊழியர்கள்
கோவில்பாளையம்: அன்னூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் 45சி டவுன் பஸ் நேற்று முன்தினம் மாலை கோவை நோக்கி சென்றது. பஸ்ஸில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் செல்லும்போது பஸ்ஸில் இருந்த 55 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென நெஞ்சு வழியால் துடித்தார். இதை பார்த்த பஸ் டிரைவர் சசிகுமார் மற்றும் நடத்துனர் தினேஷ் குமார் ஆகியோர் உடனடியாக குரும்பபாளையத்திலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் பஸ்சை ஓட்டிச் சென்றனர். உடனடியாக அந்தப் பயணியை தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அதன் பின்னர் கோவைக்கு பஸ்சை இயக்கினர். மருத்துவமனையில் பயணி சரியான நேரத்தில் சேர்க்கப்பட்டதால் சிகிச்சை அளிப்பது எளிதாக இருந்தது என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். பஸ்சில் இருந்த பயணிகளும், டிரைவர் மற்றும் கண்டக்டரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.