கட்சி விளம்பரத்தால் அலங்கோலமானது அரசு சுவர்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வால்பாறை; மலைப்பாதை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சுவர் விளம்பரம் செய்வதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், தி.மு.க., வினர் கட்சி விளம்பரங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக, ஆழியாறிலிருந்து வால்பாறை நகர் வரும் வழியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், தடுப்புச்சுவர்களில் விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தியுள்ளனர். இதே போல் வால்பாறை நகரில் அ.தி.மு.க.,வினர் நெடுஞ்சாலைத்துறை ரோடு, பயணியர் நிழற்கூரைகளில் விதிமுறையை மீறி, போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, அரசு சுவர்களில் விளம்பரம் செய்வதால், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் கூறியதாவது: 'சுற்றுலா ஸ்தலமான வால்பாறைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், விதிமுறை மீறி சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களால், வாகன ஓட்டுநர்கள், கவனசிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வால்பாறை மலைப்பகுதியில் அரசு சுவர்களில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள, விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர போஸ்டர்களை அகற்றி, வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.