உயிரிழந்த மூதாட்டியின் செயினை திருடிய சுகாதார பணியாளர் கைது
கோவை : கோவை அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை திருடிய சுகாதார பணியாளரை, போலீசார் கைது செய்தனர். பாப்பநாயக்கன்பாளையம், போலீஸ் குடியிருப்பில் (பி.ஆர்.எஸ்.,) வசிப்பவர் செந்தில்குமார்; மனைவி செல்வி, 39. செந்தில்குமார் கோவை மாவட்ட எஸ்.பி.,யின் 'கன்மேன்' ஆக பணியாற்றி வருகிறார். செல்வியின் தாயார் உடல் நலக்குறைவால், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவரின் கழுத்தில் இருந்த ஆறு கிராம் தங்க செயின், உயிரிழந்தபோது மாயமாகியிருந்தது. இது குறித்து செல்வி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு பணியாளர்களிடம், விசாரணை நடத்தினர். மூதாட்டியின் செயினை திருடியது தீவிர சிகிச்சை பிரிவில், சுகாதார பணியாளராக உள்ள செல்வபுரத்தை சேர்ந்த ராஜசேகர், 35 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.