இமயமலை சாம்பல் வாலாட்டி பறவைகள் வருகை வால்பாறையில் கணக்கெடுப்பு
வால்பாறை, :இமயமலையில் இருந்து, வால்பாறைக்கு வந்துள்ள சாம்பல் வாலாட்டி பறவைகளை, பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணியர் கண்டுகளித்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) பகுதி, வனச்சூழலின் மத்தியில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியை சுற்றிலும் அதிகளவில் பறவைகள் காணப்படுகின்றன.இங்குள்ள, அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான செல்வகணேஷ் தலைமையில், கடந்த ஆறு ஆண்டுகளாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.கணக்கெடுப்பின் போது, வெளிநாட்டிலிருந்து வந்த, 20 வகையான வலசைப் பறவைகளை கண்டறிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும், 12 ஓரிடவாழ் பறவைகளையும் மாணவர்கள் நேரில் கண்டறிந்தனர்.இந்நிலையில், வால்பாறையில் பருவமழைக்கு பின் வெயில் நிலவும் நிலையில், இமயமலையில் இருந்து, வால்பாறை வனப்பகுதிக்கு சாம்பல் வாலாட்டி பறவைகள் வந்துள்ளது தெரிந்தது.பறவைகள் ஆராய்ச்சியாளர் கூறியதாவது: இமயமலையில் தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் காரணமாக, உணவு மற்றும் வாழ்விடத்துக்காக சாம்பல் வாலாட்டி பறவைகள் வால்பாறைக்கு வந்துள்ளன.இங்கு, மழை, வெயில் என, இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், இந்த பறவைககள் சில மாதங்கள் வரை வால்பாறையில் இருக்கும்.ஆண்டு தோறும், அக்., மாதங்களில் பறவைகள் வால்பாறையில் முகாமிடுகின்றன. இமயமலையில் இருந்து, இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறைக்கு வரும் வழியில் ஓய்வு எடுத்தும் வருவதுண்டு; ஒரே நாளில் பறந்து வருவதும் உண்டு. மார்ச் மாதம் துவக்கத்தில் வால்பாறையிலிருந்து மீண்டும் பறவைகள் இமயமலைக்கு செல்லும்.இவ்வாறு, கூறினார்.