இடி தாக்கியதில் கருகிய மரங்கள் நிவாரணத்துக்கு எதிர்பார்ப்பு
குடிமங்கலம்: இடி தாக்கி கருகிய தென்னை மரங்களை கணக்கெடுத்து, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, கொங்கல்நகரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில் கோடை கால மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 14ம் தேதி, பெதப்பம்பட்டி, அம்மாபட்டி, கொங்கல்நகரம், மரிக்கந்தை, வல்லக்குண்டாபுரம், அடிவள்ளி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.அப்போது இடிதாக்கியதில், கொங்கல்நகரம், அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில், தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்து கருகின. மின்மோட்டார்களும் பாதிக்கப்பட்டது.மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வி.ஏ.ஓ., மற்றும் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்யவில்லை.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'ஆலங்கட்டி மழை மற்றும் இடி, மின்னலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இடி தாக்கி கருகிய தென்னை மரங்களை கணக்கெடுத்தும், இதர பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கவும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்றனர்.