மழைப்பொழிவு அதிகரிப்பு ; அணை நீர்மட்டம் உயர்வு
வால்பாறை; பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில், கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. கடந்த ஜூன் மாதம் பருவமழை தீவிரமடைந்த நிலையில், வால்பாறையில் உள்ள பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின. காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், வால்பாறையில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால், வால்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,324 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 170 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 158.93 அடியாக இருந்தது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு, 2,590 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 3,230 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.