உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அதிகரித்து வரும் பிளக்ஸ் பேனர் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

 அதிகரித்து வரும் பிளக்ஸ் பேனர் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு

வால்பாறை: நகரில் அதிகரித்து வரும் பிளக்ஸ் பேனர்களால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகரம் குறுகலான ரோட்டில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்நகரில் பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக, வால்பாறை அரசு கல்லுாரியின் முன் புறம், காந்திசிலை, கண்ணாடிமாளிகை, அண்ணாசிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள் சார்பில், 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்துள்ளனர். வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் மெயின்ரோட்டில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் வைக்ககூடாது என அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால், வாகன ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வால்பாறை நகரில் அரசு கல்லுாரி, அண்ணாசிலை, காந்திசிலைகளை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், கோர்ட் உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தவர்கள் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும். இது போன்று விதிமுறையை மீறி பேனர்கள் வைத்துள்ளவர்கள் மீது, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை