மேலும் செய்திகள்
விதை பண்ணை அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
15-Sep-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணைகளை பதிவு செய்து கொள்ள, விதைச்சான்றளிப்பு துறை உதவி இயக்குனர், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், பொங்காளியூர், வடக்கலுார் பகுதியில், தனியார் விதை உற்பத்தியாளர்களால் நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பயிர் பூப்பருவம் எய்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில், விதைப்பண்ணைகளை பதிவு செய்து கொள்ள, கோவை மாவட்ட விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.கோவை மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் மாரிமுத்து அறிக்கை:நடப்பு பருவத்துக்கேற்ற ரகங்களான, கோ 51, கோ 55, ஏஎஸ்டி 16, ஏடிடி 37 மற்றும் ஏடிடி(ஆர்) 45, விதைப்பண்ணைகள் தனியார் விதை உற்பத்தியாளர்களால் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரகங்கள் குறுகிய வயதுடையதாகும். விதைச்சான்று நடைமுறையின்படி, நெல் விதைப்பண்ணைகளை பூப்பதற்கு முன், கோவை விதைச்சான்று உதவி இயக்குனர், விதைச் சான்றளிப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.விதைப்பண்ணைகளின் விதைப்பு அறிக்கைகளை தயார் செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விதைப்பு அறிக்கைகள் மூன்று நகல்களில் விதை ஆதார அட்டைகள் மற்றும் விற்பனை பட்டியலுடன் உதவி இயக்குனர் அலுவலர்கத்தில் சமர்பித்து, பதிவு கட்டணம், ஒரு விதைப்பு அறிக்கைக்கு, 25 ரூபாய்; வயல் ஆய்வு கட்டணம் ஏக்கருக்கு, 100 ரூபாய்; பகுப்பாய்வு கட்டணம் குவியலுக்கு, 80 ரூபாய் பதிவின் போது செலுத்த வேண்டும்.குறுகிய கால ரக விதைப்பண்ணைகளை விதைச்சான்று அலுவலர்களால், பூப்பருவத்தில் (85வது நாள்) மற்றும் முதிர்ச்சி நிலையில் (95வது நாள்) ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் போது, விதைப்பு தேதி, ரகம், விதை ஆதாரம், பரப்பு விலகு துாரம், கலவன் கணக்கீடு, மகசூல் கணக்கீடு செய்தல் போன்ற பணிகள் விதைச்சான்று அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.வயல் தரத்தில் நேரும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படுகிறது. அறுவடை முடிந்து மூட்டைகளில் பிடிக்கப்பட்ட விதைக்குவியல் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது.சுத்தம் செய்யப்பட்ட விதைக்குவியல்களில் இருந்து, விதை மாதிரிகள் எடுக்க வேண்டும். அரசு விதை பரிசோதனை நிலையத்துக்கு விதை மாதிரிகள் அனுப்பப்பட்டு அங்கு விதை தரங்களான முளைப்புத்திறன் புறந்துாய்மை, ஈரப்பதம், பிற ரகம் கலவன்கள் ஆய்வு செய்யப்படுகிறது.இதன் முடிவுகள் பெறப்பட்ட பின், விதைத்தரத்தில் நேரும் விதைக்குவியலுக்கு ஆதார நிலை விதைக்குவியலுக்கு நீல நிற சான்று அட்டைகள் (5 ரூபாய் கட்டணமாக ஒரு அட்டைக்கு), சான்று நிலை விதைக்குவியலுக்கு நீல நீற சான்று அட்டைகள், (ரூபாய், 4, ஒரு அட்டைக்கு) வழங்கப்பட்டு விதைச்சான்று விபரங்களை சான்று அட்டை பொருத்தப்பட்டு தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிக்க தயாராகிறது.எனவே, அனைத்து விவசாயிகளும் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் வாயிலாக அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-Sep-2024