புதிய பாடப்பிரிவுகள் துவக்கினால் மட்டும் போதுமா; ஆய்வகங்களுக்கும் நிதி வேணும்
கோவை; அரசு கல்லுாரிகளில் புதிதாக துவங்கப்பட்ட, பாடப்பிரிவுகளுக்கான ஆய்வகங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என, அதிருப்தி எழுந்துள்ளது.ஆண்டுதோறும், அரசு கலை கல்லுாரிகளில் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், துவக்கப்படும் பாடப்பரிவுகளுக்கு, தேவையான ஆய்வகங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க, நிதி வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பாடப்பிரிவுகளில், எழுத்து தேர்வுக்கு இணையாக செய்முறை தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், புதிய பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு, செய்முறை வகுப்புகள் நடப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.பல கல்லுாரிகளில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தான் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அரசு ஆய்வகங்கள் அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில்,'பாடப்பிரிவுகளை துவக்கும் முன், உரிய கட்டமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும். புதிதாக துவக்கப்படும் பாடப்பிரிவுகளுக்கான ஆய்வகங்கள் அமைக்க, இரண்டு ஆண்டுகள் கழித்தே அரசு நிதி ஒதுக்குகிறது' என்றார்.