மருத்துவ உபகரணங்களுக்கான ஆய்வகம்; நிலஅளவை துறையில் கோப்பு சமர்ப்பிப்பு
கோவை; தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்களின் ஆய்வகத்திற்காக, தேர்வு செய்யப்பட்ட இடம், நிலஅளவை துறையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தரக்கட்டுப்பாடு அமைப்பு சார்பில், மருந்துகள் மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.ஆய்வில், தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே விற்பனை, பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இதற்கான ஆய்வகம் தமிழகத்தில் எங்கும் இல்லை. கோவையில் முதன்முறையாக அமையவுள்ளது. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு அமைப்பு சார்பில், மத்திய, மாநில நிதி பங்களிப்பில் 29.67 கோடி ரூபாய், இந்த ஆய்வக்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள ஆய்வகத்திற்கு, கவுண்டம்பாளையம் பகுதியில் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மாரிமுத்துவிடம்கேட்டபோது, ''மருத்துவ உபகரணங்கள் ஆய்வு செய்யும் ஆய்வகத்திற்கு, நிதி தயார்நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்து ஒதுக்கப்பட்ட இடம், இறுதி செய்யப்பட்டுள்ளது. ''தற்போது ஒப்புதலுக்காக, நில அளவை துறைக்கு கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் செயல்பாடுகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.