நில ஆவணங்கள் நவீனமயமாகின்றன; லிடார் சர்வே பணிகள் துவங்கியது
கோவை; நகரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும்திட்டத்தின் (நக்சா) கீழ் டிரோன்களை கொண்டு சர்வே செய்யும் பணிகள் கோவையில் துவங்கியது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான கணபதிக்குட்பட்ட ஏழு வார்டுகளில் (வார்டு எண் 19, 20, 29, 30, 31, 47, 48) முன்னோடி திட்டமாக நிலஆவணம் நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், ட்ரோன் பயன்படுத்தி லிடார் முறையில் நில அளவை மேற்கொள்ளப்படும்.இதற்காக, 5 டி 'லிடார்' சென்சார் கேமரா மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கட்டடம், இடம், எல்லை பரப்புகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், பதிவாகும். இதன் மூலமாக பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் நிலத்தின் பரப்பளவு மற்றும், கட்டடத்தின் மொத்த சதுரடி ஆகியவை பதிவு செய்யப்படும்.அந்தப் பதிவுகள் அனைத்தும் கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். இந்தப்பதிவுகளின் அடிப்படையில் தான் சொத்துவிபரங்கள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளில் கையாளப்படும். அதுவே துல்லியமான ஆதாரமாக இருக்கும்.குறிப்பாக அடுக்குமாடி வீடுகளுக்கு தனிப்பட்டா கிடையாது. கூட்டுப்பட்டா மட்டுமே வழங்கப்படும். இந்த சர்வே முடிந்து துல்லியமான ஆவணங்கள் பதிவு செய்யப்படும்.நம்நாட்டில், 156 நகரங்களில், 4,142 சதுர கி.மீ., பரப்பில் இந்த முன்னோடி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு, 194 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.இது குறித்து நில அளவைத்துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:ட்ரோன் மூலமாக நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் உருவாக்கப்படும். இப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலங்களில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நிலஅளவை மேற்கொள்ளப்படும். நில அளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். கோவை நகரில் ஓராண்டு காலத்தில் இந்த முன்னோடி ஆய்வு பணிகள் முடிக்கப்படும்.நக்சா திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நில அளவை பதிவேடுகள் துறை மண்டல துணை இயக்குநர் மோகன், நில அளவை அலுவலக நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.