உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆசியுடன் மறுபடியும் நடக்கிறது மண் கொள்ளை! இந்த முறை மதுக்கரை தாலுகா எட்டிமடையில்

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆசியுடன் மறுபடியும் நடக்கிறது மண் கொள்ளை! இந்த முறை மதுக்கரை தாலுகா எட்டிமடையில்

கோவை: கோவையில் பட்டாநிலங்களிலும், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களிலும் மண் அள்ளுவது தொடர்கிறது. புதிதாக இப்போது மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் லாரி, லாரியாக மண் அள்ளி கடத்தப்படுகிறது. இதற்கு உடந்தையாக இருப்போரையும், கண்காணிக்காமல் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் மீதும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில், மண்வெட்டி எடுத்து கட்டுமானம், செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.அதிகாரிகள் உடந்தையாக இருந்ததோடு, கண்டுகொள்ளாமல் மெத்தனமாகவும் இருந்தனர். இயற்கை வளம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவதை பார்த்த இயற்கை ஆர்வலர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.கோர்ட் தலையிட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு குட்டு வைத்ததன் பின், கலெக்டர் ஒவ்வொரு நடவடிக்கைகளாக தொடர்ந்தார். அதன் பயனாக வனம், வருவாய், கனிம வளம், போலீஸ், கிராமங்களில் வசிக்கும் தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்களை கொண்டு, கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.இச்சூழலில், மண் அள்ளுவது கட்டுக்குள் வந்து விட்டதாக, அதிகாரிகள் முழுமையாக நம்பினர். அவர்களின் நம்பிக்கையின் 'மண்' விழுந்தது போல், மதுக்கரை தாலுகா எட்டி மடை கிராமத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள, பட்டா நிலத்தில் பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு, மண் வெட்டி டிப்பர் லாரிகளில் கடத்தப்படுகிறது.இரவு 8:00 மணிக்கு துவங்கும் கடத்தல், அதிகாலை வரை நடப்பதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர். இது குறித்து தகவல் தெரிந்தும், இதில் ஈடுபடுவோருக்கு அரசியல் பின்னணி இருப்பதால், கிராமநிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கண்டுகொள்ளாமலேயே இருப்பதாக, இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் அதிரடியாக களமிறங்கி, கோவையின் இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும்.

'கடும் நடவடிக்கை'

கோவை தெற்கு ஆர்.டி.ஓ.,ராம்குமார் கூறியதாவது: தாசில்தார், கிராமநிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கைகளை மீறி, பட்டாநிலங்களிலிருந்து மண் கடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு, ராம்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ramesh
மே 01, 2025 12:36

அரசு செலவு இல்லாமல் குளங்களை தூர் வார வேண்டும் என்றால் லாரிக்காரர்களுக்கு குறிப்பிட இடத்தை அளவுக்கேற்ப நீளம் அகலம் ஆழம் ஆகியவற்றை முடிவு செய்து இலவசமாக மண் அள்ள அனுமதித்தால் செலவில்லாமல் அநேக குளங்களை தூர் வரலாம் .ஆழமான பகுதியில் அள்ள அனுமதிக்க கூடாது.ஆனால் இது அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை