காலாண்டு லீவு குறைவு; சிறப்பு வகுப்பில் குழப்பம்
பொள்ளாச்சி : காலாண்டு விடுமுறை குறைந்த நாட்கள் மட்டுமே அளிக்கப்படுவதால், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதில் குழப்பம் நீடிக்கிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. வரும், 27ம் தேதி முதல், அக்., 2ம் தேதி வரை, ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.இந்நாட்களில், சனி, ஞாயிறு மற்றும் காந்திஜெயந்தி நீங்கலாக, வரும், 30ம் தேதி, அக்., 1 ஆகிய இரு தினங்களில் மட்டுமே வழக்கமான காலாண்டு விடுமுறையாக இருக்கும். அதனால், அந்த நாட்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், '10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த, பல தலைமையாசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், குறைந்த தினங்கள் மட்டுமே விடுமுறை இருப்பதால், குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைக்க இயலாது. அதனால், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாட்டில் குழப்பமான நிலை நீடிக்கிறது,' என்றனர்.