நுாலக கட்டுமானம்; அமைச்சர் ஆய்வு
கோவை: கோவை காந்திபுரத்தில் நுாலகம் கட்டும் பணியை, பள்ளி கல்வி மற்றும் நுாலகத்துறை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டு, பணி முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தார்.கோவை காந்திபுரத்தில், 6.98 ஏக்கரில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. கடந்தாண்டு நவ., 6ல் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், 2026 ஜனவரி மாதம் திறந்து வைப்பேன் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால், நவீன தொழில்நுட்பத்தில் கட்டுமான பணியை பொதுப்பணித்துறை வேகப்படுத்தி வருகிறது. கட்டுமான பணிகளை, தமிழக பள்ளி கல்வி மற்றும் நுாலகத்துறை அமைச்சர் மகேஷ் நேற்று பார்வையிட்டு, பணியின் முன்னேற்றத்தை கேட்டறிந்தார். என்னென்ன பணிகள் நடந்து வருகின்றன என்பதை பொதுப்பணித்துறையினர் விளக்கினர். ஜூலை மாதத்துக்குள் அடுத்த கட்ட பணி முடியும். குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
எந்த தளத்தில் என்ன?
தரைத்தளத்தில் ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மையம், முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நுாலகம் மற்றும் போட்டி தேர்வுக்கான நுாலகம், மூன்றாம் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நுாலகம் மற்றும் தலைமை நுாலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, ஐந்தாம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஆறாம் தளத்தில் பருவ இதழ்கள் மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் டிஜிட்டல் நுாலகம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மொத்தம், 90 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.