மாணவியர் விடுதியில் அமைச்சர் ஆய்வு; அடுக்கடுக்கான புகாரால் அப்செட்
வால்பாறை: வால்பாறையில், அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அமைச்சரிடம், மாணவியர் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.கோவை மாவட்டம், வால்பாறையில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நடந்த விழாவில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன்பின், வால்பாறை நகரில் உள்ள அரசு கல்லுாரி மாணவியர் விடுதியை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவியர் விடுதியில் உணவு சரியில்லை. போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. அடிப்படை வசதிகள் இல்லை என அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.இதனால், டென்சன் ஆன அமைச்சர் விடுதி வார்டன் ஜான்சிராணியிடம், மாணவியர் புகார் குறித்து விளக்கம் கேட்டார். எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் விடுதியை நிர்வகித்து, உணவு வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ''வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், டான்டீ தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் மின் இணைப்பு வழங்குவது குறித்து, வனத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மாணவர்கள் அவதி!
வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்காக காந்தி சிலை வளாகத்தில் இருந்து புறப்படும் அனைத்து அரசு பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டன. பொதுமக்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே விழா நடந்ததால், ஒலிபெருக்கி சப்தத்தால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.