பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம்
வால்பாறை: தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், மழை கால முன்னெச்சரிக்கை குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கபட்டது. வால்பாறையில் வடகிழக்குப்பருவ மழை பரவலாக பெய்கிறது. இதனையடுத்து மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளவது குறித்து, தீயணைப்புத்துறை சார்பில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை, தனிதாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் ஆகியோர்துவக்கி வைத்தனர். தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பது குறித்து பேசினர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை பாதுகாப்பாக மீட்பது, ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், விபத்தின் போது முதலுதவி செய்வது குறித்தும் செயல்விளக்கம் காண்பித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை காலத்தில் ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இடியுடன் மழை பெய்யும் போது, மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணியர் ஆற்றில் ஆழம் தெரியாமலும், நீச்சல் தெரியாமலும் குளிக்க வேண்டாம். மழை வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை மீட்க எந்த நேரத்திலும், தீயணைப்பு துறையினரை அழைக்கலாம். இடி, மின்னலின் போது மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மழை காலங்களில் குழந்தைகளை எச்சரிக்கையாக பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.