வனக்கல்லூரி மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி
மேட்டுப்பாளையம்; வனப்பகுதிகளை நேரில் கண்டறிய,வனக்கல்லூரி மாணவர்கள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பி.எஸ்.சி., வனவியல், பட்டு வளர்ச்சி, எம்.எஸ்.சி., ஆகிய பாட வகுப்புகள் உள்ளன. பி.எஸ்.சி., வனவியல் பாடப்பிரிவில், வனப்பகுதி குறித்த பாடம் உள்ளது. அதனால் வனப்பகுதிகளை களப்பயிற்சியின் வாயிலாக அறிந்து கொள்ள, வனக்கல்லூரி மாணவர்களை, கல்லூரி நிர்வாகத்தினர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுத்தினர். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் நிஹார் ரஞ்சன் தலைமையில், துறைத்தலைவர்கள் சேகர், ரமேஷ் உள்பட, 43 மாணவ, மாணவியர், ஐந்து ஆசிரியர்கள், வனக்கல்லூரிலிருந்து கோத்தகிரி சாலை மலைப்பகுதி வழியாக, குஞ்சப்பனை வரை, எட்டு கிலோ மீட்டர் வனப்பகுதியில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து வனக்கல்லூரி டீன் நிஹார் ரஞ்சன் கூறுகையில், வனப்பகுதியில் வன உயிரினங்கள் எவ்வாறு வாழ்கின்றன. மரங்கள் எவ்வாறு வளர்கின்றன. அதற்குத் தேவையான தண்ணீர் எப்படி கிடைக்கிறது ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சியில் விளக்கப்பட்டது. இதன் வாயிலாக மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கப்பெற்றது. இவ்வாறு டீன் கூறினார். மேட்டுப்பாளையம் வனத்துறை பணியாளர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், உடன் சென்றனர்.