கோவை: ''தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருமனதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர், என, கோவையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில், அண்ணாமலை அளித்த பேட்டி: ஒரு தேர்தலை புறக்கணிப்பது என்பது பா.ஜ.,வில் அபூர்வமான விஷயம். எல்லா தேர்தலையும் பா.ஜ., எதிர்கொண்டுள்ளது. இந்த முறை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், ஒரு மனதாக ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது. ஈரோடு கிழக்குத் தேர்தலை, மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். கடந்த முறை எப்படி பட்டியில் அடைத்து வைத்தார்களோ, அதே போல் இந்த முறையும் அப்படியே செய்வர். மக்கள் பதிலடி கொடுப்பர்
மக்களுக்கு அந்த வலி வேண்டாம், என்று நினைக்கின்றோம். அதே நேரத்தில் தமிழக மக்கள் இதை உணர்வார்கள் என நம்புகிறோம். எதிர்க்கட்சியினர் எல்லோரும், தேர்தலைப் புறக்கணிப்பதை முதல் முறையாக பார்க்கிறோம். மக்கள் மனசாட்சிப்படி, பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் அடக்குமுறை, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பணம், பரிசுப் பொருட்கள் அளிப்பது ஆகிய, தேர்தலையே கேவலப்படுத்தும் தி.மு.க.,வின் செயல்பாடு இதுவே கடைசியாக இருக்கட்டும். மாவட்ட ஆட்சித் தலைவரும், மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே, தேர்தலை நடத்துகின்றனர். வெளி மாநிலத்திலிருந்து வந்து, கண்காணிக்க கூடிய தேர்தலாக மட்டுமே இருக்கும். பா.ஜ., தொண்டர்களை ஓட்டு போட வேண்டாம் என கட்டாயப்படுத்த போவதில்லை. அவர்களுக்கு வேறு வாய்ப்புகளும் உள்ளன. 'அப்பா...அப்பா'
சட்டசபையில் முதல்வரை, அப்பா... அப்பா... என்று அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். யாராவது 'அப்பா அப்பா' எனக்கு கூப்பிட்ட வீடியோவை பார்க்க வேண்டும். இது போன்ற ஒரு முதலமைச்சரை நான் பார்த்தது இல்லை. இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இது துன்பம் பொங்கும் பொங்கலாக இருக்கிறது. அவருடைய குடும்பத்தில் இன்பம் பொங்கியது; இன்ப நிதி வருகிறார். தமிழக மக்களுக்கு எந்த இன்பமும் இல்லை; துன்பம் தான் நடக்கிறது. பெரியாருக்கும் நிகழ்கால தமிழகத்திற்கும், எவ்வித தொடர்பும் இல்லை. முரசொலி 1962 பொங்கல் மலரில், பெரியார் கார்ட்டூன் வெளியாகியுள்ளது. அதை படித்தால் அருவருப்பாகிவிடும்; ஆபாசமாக போய்விடும். சீமான் பேசியிருக்கிறார். நாங்கள் பேச விரும்பவில்லை. பெரியாரை பற்றிய எங்கள் பார்வை, சிந்தனை மாறவில்லை. டங்ஸ்டன் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எவ்வித லாபமும் இல்லை. தம்பித்துரை இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தாரா என்பதுதான் கேள்வி. முதலமைச்சரும் சட்ட சபையில் இந்த விஷயத்தில் உண்மையை பேசவில்லை. சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை. இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.பொங்கல் பரிசு குறித்து கேட்டதற்கு, 'தேர்தல் வரட்டும்' என்று பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் கருத்து குறித்து கேட்டதற்கு, ''அமைச்சர் துரைமுருகனுக்கு ஓய்வு வேண்டும். அதற்கான வயதை அவர் தாண்டி விட்டார். அதுதான் இப்படி பேசுகிறார்,'' என்றார் அண்ணாமலை.
'கவர்னர் கூறியது சரியே'
''கவர்னர் கடுமையான வார்த்தையை பயன்படுத்தும் அளவுக்கு, கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கவர்னருக்கு எதிராக சென்னை முழுவதும் போஸ்டர்கள், ஆபாச பேச்சுக்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஊக்குவிக்கிறார் என்று அர்த்தம். அதைத்தான் கவர்னர், குழந்தைத்தனம் என்று சொல்கிறார். அவர் சொல்லி இருப்பது சரியே,'' என்றார் அண்ணாமலை.