உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நியூஸ்கீம் ரோடு சந்திப்பு விரிவாக்கம்: பழமையான மரம், கோவில் அகற்றம்

 நியூஸ்கீம் ரோடு சந்திப்பு விரிவாக்கம்: பழமையான மரம், கோவில் அகற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடக்கின்றன. பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு வழியாக, பல்லடம், திருப்பூர், உடுமலை, பழநி செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.அதில், நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில், குறுகிய ரவுண்டானாவினால்,போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. ரவுண்டானா சந்திப்பின் மத்தியில் இல்லாமல், வேறு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், சந்திப்பு பகுதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்லடம் ரோடு - நியூஸ்கீம் ரோடு சந்திப்பை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, சந்திப்பு பகுதியில் அரசமரத்தடியில் இருந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டு, சுவாமி சிலை அருகே உள்ள கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பறவைகளின் கூடாரமாக இருந்த அரச மரம், கிளைகள் வெட்டப்பட்டு அதே ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகே மறு நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை சந்திப்பை மேம்படுத்தும் வகையில், ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. ரவுண்டானா நான்கு புறமும் ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன,' என்றனர். அடையாளம் மாறியது பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், பழமையான அரச மரத்தடியில் விநாயகர் கோவில் இருந்தது. இது இப்பகுதியின் அடையாளமாக இருந்தது. தொழிலாளர்கள், மக்கள் மரத்தின் கீழ் உள்ள திட்டில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. வெயில் காலங்களில் அங்குள்ள மர நிழலிலும், வீசும் காற்றும் அவ்வழியாக செல்வோருக்கு இதமாக இருந்தது. மேலும், பறவைகளின் கூடாரமாக மரம் இருந்தது. அப்பகுதியில், மரம் அகற்றப்பட்டு அடையாளமே மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை