இளநீர் விலையில் மாற்றமில்லை
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீருக்கு கணிசமான தேவை இருப்பதால் இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தேனி, கம்பம் பகுதி இளநீரின் தரம் சற்று குறைந்து காணப்படுகிறது. வட மாநில வியாபாரிகள் பொள்ளாச்சி பகுதி இளநீரையே விரும்பி வாங்குகின்றனர். கர்நாடகா மத்துார் சந்தையில் இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதன் தரமும் குறைந்து காணப்படுகிறது. அங்கு இளநீர், 53 ரூபாய்க்கு தரம் பிரித்து லாரியில் ஏற்றி தரப்படுகிறது. மத்துார் சந்தையில் பெரும்பாலும் திப்துார் ரக நாட்டு இளநீர் அதிகம் விற்பனைக்கு வருகிறது. எனவே, விவசாயிகள் இளநீருக்கு நல்ல விலை கேட்டு பெறவும். இவ்வாறு, அவர் கூறினார்.