பஸ்சில் வழித்தட விபரம் இல்லை; குழப்பத்தில் தவிக்கும் பயணியர்
வால்பாறை; வால்பாறையில் இயங்கும் அரசு பஸ்களில், முறையான பெயர் பலகை இல்லாததால், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். வால்பாறையில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, மன்னார்காடு, திருப்பூர், சேலம் மற்றும் உள்ளூர்களுக்கு, 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, நான்கு 'ஸ்பேர்' பஸ்களும் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறையில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதியில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டவையாகும். இந்த பஸ்களில் வழித்தட பெயரை மாற்றாமல் வால்பாறையில் இயக்குவதால் பயணியருக்கு குழப்பம் ஏற்படுகிறது. பயணியர் கூறியதாவது: மலைப்பாதையில் அரசு பஸ்களில் பயணிப்பது மிகவும் பயமாக உள்ளது. பிற பகுதிகளில் ஓடிய பழைய பஸ்களை பெயர் கூட மாற்றாமல், வால்பாறை வழித்தடத்தில் இயக்குகின்றனர். குறிப்பாக, அக்காமலை, பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில், பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே வேறு வழித்தடத்தில் இயக்குகின்றனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களின் முகப்பு, பின்பக்கம் மக்கள் பக்கவாட்டு பகுதியில் வழித்தட விபரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு, கூறினர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில்,'வால்பாறையில் மோசமான நிலையில் இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு சில பஸ்கள் மட்டும் மாற்றப்பட வேண்டியுள்ளது. எஸ்டேட் பகுதிக்கு இயக்கபடும் அரசு பஸ்கள், பொள்ளாச்சிக்கு இயக்கப்பட்டு வந்ததால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. விரைவில் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் மிண்ணனு முறையில் பெயர் பலகை மாற்றியமைக்கப்படும்,' என்றனர்.