10ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க உத்தரவு
கோவை: நடப்பு (2025 - 2026) கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக, எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் அக்., 6 முதல் அக்., 23க்குள் எமிஸ் தளத்தில் தங்களது பள்ளி மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், மதம், ஜாதி, முகவரி, மற்றும் பெற்றோரின் பெயர் போன்ற முக்கிய விபரங்களை முழுமையாக சரிபார்த்து, ஏதேனும் திருத்தம் இருந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், அவர்களது விவரங்களில் தவறு ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடுமென, அரசு தேர்வுகள் இயக்குனரகம் எச்சரித்துள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து விபரங்களையும் கவனமாகச் சரிபார்த்து சரியாகப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.