உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு களமிறங்கிய துணை ராணுவம்

 தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு களமிறங்கிய துணை ராணுவம்

-- நமது நிருபர் -: சட்டசபை தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 82 பெண்கள் திருப்பூர் வந்தனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தயாராகியுள்ளது. மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக கொடி அணிவகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, டில்லியில் இருந்து சிறப்பு ரயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்றுமுன்தினம் மதியம் திருப்பூர் வந்தனர். முதல் கட்டமாக, இரண்டு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. உள்ளிட்ட, 82 பேர் வந்துள்ளனர். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அவர்களை வரவேற்கும் வகையில், மாநகர போலீசார் ஏற்பாடு செய்தனர். மகளிர் தினம் என்பதாலும், வந்திருந்த பாதுகாப்பு படையினர் பெண்கள் குழு என்பதாலும், அவர்களை தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன் உள்ளிட்ட மாநகர பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வரும் நாட்களில் மேலும் பாதுகாப்பு படையினர் வர உள்ளனர். தற்போது வந்துள்ளவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாநகரில் கொடி அணி வகுப்பு உள்ளிட்டவை நடத்த உள்ளனர். பதட்டமான பகுதிகள், பதட்டமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வருகையால், சட்டசபை தேர்தலுக்கான களை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ