போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
வால்பாறை; வால்பாறை நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வால்பாறையில், பொள்ளாச்சி ரோட்டில் அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கு தனி 'பார்க்கிங்' வசதி இல்லாததால், ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தயக்கம் காட்டுவதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பிரதான ரோட்டின் இருபுறமும் வாகனங்களும், ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகளவில் இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும் நிம்மதியாக ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி சார்பில் கார் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முழுமையாக அகற்ற வேண்டும்,' என்றனர்.