மருத்துவமனை வளாகம் முழுவதும் கரடுமுரடு படுக்கையை அடைவதற்குள் நோயாளிகள் பெரும்பாடு
கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், சாலை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் துவங்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால், நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசு மருத்துவமனையில், கடந்த ஜன., மாதம் புற நோயாளிகளாக 1,38, 250 பேரும், பிப்., மாதம் 1,39,490 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.உள் நோயாளிகளாக மாதம், 44,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சராசரியாக ஒவ்வொரு மாதமும், 9,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், புதிய நோயாளிகளாக உள்நோயாளி பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். இதுபோன்று அதிக நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையில், தரமான சிகிச்சை கிடைத்தாலும், மருத்துவமனை வளாகத்துக்கு இன்னும் 'சிறப்பான சிகிச்சை' தேவைப்படுகிறது. 9.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள், கழிவுநீர் செல்லும் பாதைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர் உடனடியாக பணிகளை துவக்காமல், காலம் தாழ்த்தி வருவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு நோயாளிகளை மாற்றும் போதும், அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு மாற்றும்போதும், பரிசோதனைகளுக்கு ஸ்டிரெக்ச்சரில் அழைத்து செல்லும் போதும், பாதை மேடு பள்ளமாக இருப்பதால், நோயாளிகள் வலியில் அலறுவதை காணமுடிகிறது. ஸ்டிரெக்ச்சர், சக்கர நாற்காலியை தள்ளிச்செல்பவர்கள், கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து, டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''சாலை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. பணிகள் மிக விரைவில் துவங்கவுள்ளன. முதலில், கழிவு நீர் பாதை வளாகம் முழுவதும் மேம்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து சாலைகள் மேம்படுத்தப்படும்,'' என்றார்.
ஒரு சக்கர நாற்காலி அவசியம்
கோவை அரசு மருத்துவமனைக்கு, நேற்று திருப்பூர் மாவட்டத்திலிருந்து தன் தாயாருடன் சிகிச்சைக்கு வந்திருந்தார். நடக்க முடியாத இவர், கடும் வலியுடன் முடக்குவாத பிரிவு அருகே கீழே விழுந்துவிட்டார்.உடன் வந்த தயாருக்கு, பதட்டத்தில் எங்கு செல்லவேண்டும், யாரிடம் சொல்ல வேண்டும் என்பது தெரியாமல் தவித்தார். அருகில் இருந்த மக்கள் கடும் சிரமத்திற்கு பின்னர், சக்கர நாற்காலி வரவழைத்து, அதில் சிரமப்பட்டு ஏற்றி, அனுப்பி வைத்தனர். இதுபோன்று, வயது முதிர்ந்த பலரும், உடல் பாதித்தவர்களும் வரும்போது, நுழைவாயில் சக்கர நாற்காலி உதவி அளித்து, சம்மந்தப்பட்ட பிரிவுக்கு அழைத்து செல்ல, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.