உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமராவதி பூங்காவில் செயல்படாத நீரூற்றுகளால் மக்கள் ஏமாற்றம்

அமராவதி பூங்காவில் செயல்படாத நீரூற்றுகளால் மக்கள் ஏமாற்றம்

பள்ளி அருகே பேனர்

பொள்ளாச்சி, நேதாஜி ரோட்டில் உள்ள அரசு துவக்கப்பள்ளி கேட் அருகே, பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. இங்கு வைக்கப்படும் பேனர்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் நலன் கருதி இங்கு பேனர் வைப்பதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.-மதன், பொள்ளாச்சி.

சர்வீஸ் ரோட்டோரத்தில் புதர்

பொள்ளாச்சி -- உடுமலை செல்லும் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு செடிகள் முளைத்து புதர் போல் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் ரோட்டின் ஓரத்தில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த செடிகளை அகற்றம் செய்ய வேண்டும்.-- டேனியல், பொள்ளாச்சி.

போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் அதிகளவு வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதால், அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதைத்தவிர்க்க போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கிருஷ்ணன், பொள்ளாச்சி.

செயல்படாத நீரூற்றுகள்

உடுமலை அருகே அமராவதி அணை பூங்காவில் நீருற்றுகள் செயல்படாமல் உள்ளன. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைகின்றனர். இதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.

பராமரிப்பு இல்லை

உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை பராமரிப்பில்லாமல் குப்பையாக கிடக்கிறது. இதனால், அதை பயணியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நிழற்கூரை பராமரிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன், உடுமலை.

குப்பையை அகற்றுங்க!

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வெங்கடேசாகாலனி ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே குப்பையை மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக அகற்றம் செய்து, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.--- சரண்யா, பொள்ளாச்சி.

இருளில் வாசவிநகர்

உடுமலை, தாராபுரம் ரோடு வாசவி நகரில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் பழுதாகி இருப்பதால் அப்பகுதி முழுவதும் இருளில் உள்ளது. மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். ஐஸ்வர்யா நகரிலிருந்து தாராபுரம் ரோட்டுக்கு வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.- வசந்தகுமார், உடுமலை.

சேதமான நிலையில் ரோடு

உடுமலை, காந்திநகர் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி குழிகளில் வாகனங்களை விட்டு விபத்துக்குள்ளாகின்றனர். நடைபயிற்சி வரும் முதியவர்களும் தடுமாறி விழுகின்றனர். ரோடு தொடர்ந்து கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து கொண்டே வருவதால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.- ரேணுகாதேவி, உடுமலை.

குறுகலான ரோடு

உடுமலையிலிருந்து ஜக்கம்பாளையம் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. சரக்கு வாகனங்கள், கனரக லாரிகள் அவ்வழியாக அதிகம் செல்கின்றன. இவ்வாறு செல்லும்போது மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடமிருப்பதில்லை. மேலும், எதிரே வரும் வாகன ஓட்டுநர்கள் ஒதுங்கி நிற்பதற்கு திணறுகின்றனர்.- சேகர், மலையாண்டிகவுண்டனுார்.

சுகாதார சீர்கேடு

உடுமலை, கொழுமம் ரோடு பிரிவில் பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சி கழிவுகளும் இருப்பதால் தெருநாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாய்கள் ரோட்டின் குறுக்கே அடிக்கடி செல்வதால் விபத்துகளும் நடக்கிறது.- ராஜா, உடுமலை.

மின் பெட்டி சேதம்

கிணத்துக்கடவு, வரதனுார் ஊராட்சியில் தனியார் பள்ளி அருகே ரோட்டாரமுள்ள மின்கம்பத்தில் மின் பெட்டி சேதமடைந்துள்ளது. இதனை ஒயர் வைத்து கட்டியுள்ளனர். மழைக்காலங்களில் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளதால், மின்துறை சார்பில் இந்த மின் பெட்டியை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.- மணி, செங்குட்டைபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி