பெ.நா.பாளையம் : அபார்ட்மென்ட்களில் நடக்கும் திருட்டைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய, அதே நாள் இரவில், நிகழ்ச்சி நடந்த அதே அபார்ட்மென்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், துடியலூர் அருகே ஜி.என்.மில்ஸ் பிரிவு உருமாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில், கடந்த 6ம் தேதி துடியலூர் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், அபார்ட்மென்டில் திருட்டு சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.போலீசார் இரவு 8:00 மணிக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்திய 6 மணி நேரத்துக்குப் பிறகு, 7ம் தேதி அதிகாலை, 2:15 முதல், 2:40 மணிக்குள் முகமூடி கொள்ளையர்கள் 3 பேர், அதே அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர். அங்கு, ஆட்கள் இல்லாத பிளாட்டை அறிந்து, கதவை உடைத்து, கம்மல், நெக்லஸ், வளையல், செயின் என, 12 பவுன் எடையுள்ள நகைகளை திருடிச் சென்றனர். இச்சம்பவம்,போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துடியலூர் போலீசார் கூறியதாவது: துடியலூரில , அபார்ட்மென்ட் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. நல்ல உயரமுள்ள கொள்ளையர்கள், சுற்றுச்சுவர் ஏறிக்குதித்து, உள்ளே நுழைகின்றனர். உடலில் டவுசர் மட்டும் அணிந்து, எண்ணெய் பூசிக்கொண்டு, முகத்தை துணியால் முழுவதும் மறைத்தபடி, திருட்டு சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். அபார்ட்மென்ட் காவலர்கள் துரத்தினால், கல்லெறிந்து தாக்கி,தப்பிக்கின்றனர். பூட்டி இருக்கும் பிளாட்கள் தான், இவர்களின் இலக்கு.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.போலீசார் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்திய அதே அபார்ட்மென்ட்டில், அதே நாளில் நடந்துள்ள திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.