ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் அண்ணா நகரில் போலீசார் அதிரடி
போத்தனூர்: கோவை, அண்ணா நகரில் போலீசாரின் அதிரடி சோதனையில், 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை, மதுக்கரை நகராட்சியின் முதலாவது வார்டுக்குட்பட்டது, கோவைபுதூர் அடுத்த அண்ணா நகர். இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட, 960 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 450 க்கும் மேற்பட்ட வீடுகளில், முத்தண்ணன் குளம், பேரூர், கண்ணாம்பு காளவாய் மற்றும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.இத்தகைய சூழலில் நேற்று காலை, 6:00 மணிக்கு பேரூர் சரக டி.எஸ்.பி. சிவகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட இரு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 75 க்கும் மேற்பட்ட போலீசார், அங்குள்ள வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்டவற்றின் ஆவணங்களை சரிபார்த்தனர். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வகையில், 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 85 வாகனங்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதியம். 1:30 மணியளவில் சோதனை முடிவுக்கு வந்தது. சோதனையின்போது அறிவொளி நகர், எம்.ஜி.ஆர். நகர் செல்லும் சாலைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, யாரும் வாகனங்களில் தப்பி போகாத வகையில், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.சுமார் ஏழரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இச்சோதனையால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவைபுதூர் சுற்றுப்பகுதியில், நான்கிற்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. வெளி மாநிலம், மாவட்டங்களிலிருநது வந்து தங்கி பயிலும் மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபடுவது, கஞ்சா விற்பனைக்கு வாகனங்களை உபயோகப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை கட்டுப்படுத்த, போலீசார் கடந்த சில மாதங்களாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் நேற்று நடந்த சோதனை, மாணவர்களிடமும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரிடையே, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.