உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளிக்கு வேட்டி, சேலை இல்லை ஏழை பயனாளிகள் ஏமாற்றம்

தீபாவளிக்கு வேட்டி, சேலை இல்லை ஏழை பயனாளிகள் ஏமாற்றம்

தொண்டாமுத்தூர்: பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், உதவித்தொகை பெறுபவர்களுக்கான வேட்டி, சேலை இன்னும் வராததால், இந்தாண்டு தீபாவளி முடிந்தபின்பே வழங்கும் நிலை உள்ளது. தமிழகத்தில், கடந்தாண்டு முதல் உதவித்தொகை பெறும் பயனாளிகளில், ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு, ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டு இல்லாத பயனாளிகளுக்கு, அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மூலமும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இந்தாண்டும், அதுபோலவே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு, மாதம் தோறும் அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கு, இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். பேரூர் தாலுகாவிற்கு உட்பட்டு, 24 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், ஆண்கள், பெண்கள் என, 14 ஆயிரம் பேர் அரசு உதவித்தொகை பெற்று வருகின்றனர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது வரை, உதவித்தொகை பெறுவோருக்கான இலவச தீபாவளி வேட்டி, சேலை வருவாய்த்துறையினர் மற்றும் ரேஷன் கடைகளுக்கு வராததால், இந்தாண்டு வேட்டி, சேலை தீபாவளி பண்டிகை முடிந்த பின்பே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத ரேஷன் கடை பணியாளர் ஒருவர் கூறுகையில், 'தீபாவளி இலவச வேட்டி, சேலை தற்போது வரை வரவில்லை. வந்தால் அப்போது வழங்கப்படும்' என்றார். ஏழைகளுக்கு பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய ஆடைகளை, பண்டிகை முடிந்து வழங்கினால் என்ன பிரயோஜனம் என்பதை, மாவட்ட வழங்கல் அலுவலர்தான் விளக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ