உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசுக்கு சலுகை; எங்களுக்கு இல்லை; வருத்தத்தில் வனத்துறை ஊழியர்கள்... பாரபட்சம்

போலீசுக்கு சலுகை; எங்களுக்கு இல்லை; வருத்தத்தில் வனத்துறை ஊழியர்கள்... பாரபட்சம்

கோவை: காவல்துறையினருடன் ஒப்பிடும்போது, ஒரே மாதிரியான விஷயங்களுக்குக் கூட சலுகைகளில் பெரிய பாரபட்சம் காட்டுவதாக வனத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது: தமிழ்நாடு வனத்துறையில், சீருடை களப்பணியாளர்கள் 6150 பேர் பணி புரிகிறோம். காவல்துறையினரோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. பணிச்சுமையில் காவல்துறைக்கு சற்றும் குறைந்தது அல்ல வனப்பணி. சொல்லப்போனால், அவர்களை விட வனப்பகுதியிலும், வனத்துக்கு வெளியேயும் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறோம். பணியின் போது விபத்தில் இறந்தால், அரசு சார்பில் நிதி உதவி கூட வழங்குவதில்லை. வனவிலங்குகள் தாக்கி காயமடைந்தாலும் நிதி உதவி கிடைப்பதில்லை. வனப்பகுதியில் 1800 ஹெக்டர் முதல் 3500 ஹெக்டர் வரை இரண்டு அல்லது மூன்று வன ஊழியர்கள் மட்டுமே கவனிக்க வேண்டியுள்ளது. வேட்டைகளைத் தடுத்தல், வன வளங்களைப் பாதுகாத்தல், வன விலங்கு - மனித முரண்பாடுகளைத் தடுத்தல், வனத்தை விட்டு வெளியேறிய உயிரினங்களை வனத்துக்குள் விரட்டுதல் என அதிக பணிச்சுமையை எதிர்கொள்கிறோம். இதில், உயிரைப் பணயம் வைத்து பணிபுரிகிறோம். காவல்துறையோடு ஒப்பிட்டால், எங்களுக்கு 24 மணி நேரமும் தனிப்பொறுப்போடு பணி செய்ய வேண்டும். எங்களுக்கு வார விடுமுறை இல்லை. அவர்கள் இலவசமாக பஸ்ஸில் பயணிக்க முடியும். எங்களால் முடியாது. ரிஸ்க் அலவன்ஸ் எனப்படும் இடர் படி ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. எங்களுக்கு வெறும் ரூ.800 தான். பணியின்போது காவல்துறையைச் சேர்ந்தவர் இறந்தால், ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும். எங்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது. நாங்களும் காக்கி சீருடைதான் அணிகிறோம். அவர்களும் அதே சீருடைதான் அணிகின்றனர். ஆனால், அவர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500ம் எங்களுக்கு ரூ.2,800ம் வழங்கப்படுகிறது. சமீபமாக இந்த சீருடைப்படி ரூ.4,500 ஆக உயர்த்தி அறிவித்தாலும், இதுவரை எந்த வனக்கோட்டத்திலும் வழங்கப்படல்லை. ரிஸ்க் அலவன்ஸ் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, சிறப்பு இலக்கு படைப்பிரிவு (எஸ்.டி.எப்.) என காவல் துறையில் ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப்பிரிவில் உள்ள போலீசார், வாரத்தில் 2 அல்லது 3 நாள் மட்டும் வனத்துக்குள் செல்வர். அவர்களுக்கு இடர் படியாக மாதம் ரூ, 6,000 வழங்கப்படுகிறது. ஆனால், எப்போதும் வனத்துக்குள்ளேயே வனவிலங்குகளின் ஆபத்துக்கு இடையில் பணிபுரியும் எங்களுக்கு வெறும் ரூ.800 மட்டுமே வழங்குகின்றனர். எங்களுக்கும் மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும். விளையாட்டிலும் காவல்துறையில் விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் பதக்கம் பெற்றவர்களுக்கு, அரசாணை எண் 808ன் படி (2, நவம்பர் 2017), ரூ. 5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், வனத்துறையில் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்று, ஒரே மாதிரியான விஷயங்களுக்குக்கூட, போலீசாருக்கு வழங்கும் சலுகைகள் வனத்துறையினருக்கு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து முதல்வர் தலையிட்டு பாரபட்சத்தைக் களைய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை