உயர்வுக்கு படி நிகழ்ச்சி; மாணவர்கள் பங்கேற்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், மாணவர்கள் உயர்கல்வி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில்,உயர்வுக்குபடி நிகழ்ச்சி நடந்தது.தமிழக முதல்வரின் திட்டமான, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 2022-23, 2023-24ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவும், 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.விழாவில், பல்வேறு கல்லுாரிகளில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயிலும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட உயர்வுக்கு படி திட்டத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.மேற்படிப்பு தொடர்ந்து கற்றிட அளிக்கப்படும் உதவித்தொகை குறித்து அரசு அலுவலர்கள், தனியார் துறையில் இருந்து வந்த பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, கல்லுாரி நிர்வாகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.