உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரதச்சத்து குறைந்தால் சிந்திக்கும் திறன் குறையும்

புரதச்சத்து குறைந்தால் சிந்திக்கும் திறன் குறையும்

மேட்டுப்பாளையம்: புரதச்சத்து குறைந்தால், பெரியவர்களுக்கு சிந்திக்கும் திறன் குறையும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய, ஹோமியோபதி பிரிவு அரசு உதவி மருத்துவர் ஜெயஸ்ரீ மீனாட்சி கூறியதாவது :புரதம் நமது உடல் திசுக்களை கட்டமைப்பதற்கும், சரி செய்வதற்கும் இன்றியமையாத மூலப் பொருளாகும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கும் ஆன்டிபாடிஸ், ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் ஆகியவை புரதத்தினால் ஆனது. உடலுக்கு சக்தி கொடுக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து, உடலுக்கு போதுமான அளவு கிடைக்காத போது, புரதம் தான் அதை சமன் செய்து, சக்தி கொடுக்கிறது.இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புரதத்தை உணவில் எங்கிருந்து பெறலாம்?மீன், கோழி, ஆட்டிறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவில் நல்ல புரதம் பெருமளவில் கிடைக்கிறது. ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும், 100 கிராம் கோழிக்கறியில் 22 கிராம் புரதமும், கிடைக்கும்.தானியங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகளில் புரதம் உள்ளது. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது, உடலுக்கு தேவையான முழுமையான புரதம் கிடைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மற்றும் அதிக அளவில் உடற்பயிற்சி செய்வோருக்கும், அதிக புரதம் தேவைப்படுகிறது.பெரியவர்களுக்கு போதுமான அளவு புரதச் சத்து கிடைக்காத போது, அவர்களது சிந்திக்கும் திறன் குறையும். வறண்ட முடி மற்றும் தோலுடனும் உடைந்த நகங்களுடன் இருப்பார்கள். எலும்புகள் எளிதில் உடையக்கூடியதாக இருக்கும்.எளிதில் எரிச்சல் அடைபவர்களாகவும், சோர்வு அடைபவர்களாகவும், கை, கால் வீக்கத்துடனும் காணப்படுவார்கள். எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்வாய் படுபவர்களாக இருப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை