மாநகராட்சி குறைதீர் கூட்டத்தை ரத்து செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
கோவை; 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமை காரணம் காட்டி, மாநகராட்சி மக்கள் குறைதீர் முகாம் நடத்தாமல் இருப்பதால், மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்க முடியாமல் உள்ளன. மாநிலம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் ஜூலை, 15ம் தேதி முதல் நடந்துவருகிறது. மாவட்டத்தில் இதுவரை, 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் மகளிர் உரிமைத்தொகை கோரப்பட்டவை. இதுஒருபுறம் இருக்க சிறப்பு முகாமை காரணமாகக்கூறி, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய் தோறும் நடந்துவந்த மக்கள் குறைதீர் கூட்டத்தை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து வருகிறது. கடந்த ஜூலை, 22 முதல் இதுவரை ஏழு வாரங்களாக முகாம் நடக்காததால், வார்டு பிரச்னைகளை முறையிட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பொது மக்கள் கூறியதாவது: அடிப்படை பிரச்னைகளுக்கு, மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில்தான், எளிதில் தீர்வுகாண முடியும். அந்தந்த மண்டல அலுவலகங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் கமிஷனரிடம் நேரடியாக முறையிடுகிறோம்; பெரும்பாலான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. ஒன்றிரண்டு வார்டுகளில் நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமுக்காக, வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தை ரத்து செய்யக்கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ரத்து கூடாது!
'வார்டு பிரச்னைகள் அந்தந்த மண்டல கூட்டங்களில் முன்வைக்கிறோம். ஆனால், அப்பிரச்னைகளை மாமன்ற கூட்டத்தில் பேசுவதற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. 'மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், சில கவுன்சிலர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. எனவே, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் இடமாக மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளது; அதை ரத்து செய்யக்கூடாது' என்கின்றனர் கவுன்சிலர்கள் சிலர்.