கோவையில் உருவாகி வரும் ரெடிமேட் ஆபீஸ்கள்; அத்தனை வசதிகளும் ஒரே இடத்தில் பெற முடியும்
கோவை ; ஒரே கட்டடத்தில் பல ஆபீஸ், அத்தனைக்கும் வசதிகள் நிறைந்த வளாகங்கள் கோவையில் தற்போது உருவாகி வருகின்றன. வேலை செய்ய வசதியாகவும், டீ, காபி, டிபன் வரை அனைத்துக்கும் பொது வசதிகள் உருவாகியுள்ளன. கோவையில் அலுவலகம் அமைக்க இனி அலைய வேண்டியதில்லை. இடம் தேடி, வாடகைக்கு பிடித்து, ஒப்பந்தம்போட்டு, கரண்ட் பில் கட்டி, இன்டெர்நெட் இணைப்பு தேடி என பல வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றால், இந்த வசதிகள் இப்போது அவசியமாகிறது. ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த அலுவலகத்துக்கு பாதுகாப்பும் அவசியம். இவற்றையெல்லாம் சொந்தமாக செய்ய வேண்டுமானால், பல கோடி செலவிட வேண்டும். ஒரு சில ஆண்டுகளும் ஆகலாம். இவற்றையெல்லாம் எளிதாக்கும் முறை கோவையில் பல இடங்களில் வந்து விட்டது. இத்தகைய கோ - ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும், ஒரே கட்டட வளாகம்; பல அலுவலங்கள் என்ற புதுமையான கருத்தோடு அலுவலகங்கள் வந்து விட்டன. இந்த ரெடிமேட் அலுவலகங்கள், வெளி மாநிலங்கள், நகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், பிற விற்பனை அலுவகங்களையும் ஈர்க்க தொடங்கி விட்டன.கோவையில் பெரிய அளவிலான மால் போன்ற அமைப்பிலான கட்டடங்களும் முக்கிய ரோடுகளில், வணிக பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. கோவை நகரில் தற்போது 10 லட்சம் சதுர அடி அலுவலகங்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றின் தேவையை பொறுத்து இடங்களின் அளவு அதிகரிக்கலாம்.இது குறித்து தொழில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வளர்ச்சி பெற்று வரும் கோவை நகரில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடம் தேடி வருகின்றன. இரண்டாம் நிலை நகரமான கோவை போன்ற இடங்களில், சிறு சிறு தகவல் தொழில் நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள், உடனடியாக அலுவலகம் துவக்க வசதியாக ரெடிமேட் ஆபீசுகள் வந்துள்ளன. இவை சிறிய அளவிலிருந்து லட்சம் சதுரடி வரை உள்ளன. சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, அவிநாசி ரோடு போன்ற இடங்களில் தற்போது உருவாகியுள்ளன. ரெடிமேட் ஆபீசில், அலங்கரிக்கப்பட்ட ஆபீஸ் அறைகள், சேர், டேபிள், இன்டர்நெட் வசதி, போன், வரவேற்பு அறை போன்றவைகளும் இடம் பெறுகின்றன. தேவைக்கு ஏற்ப இடவசதியை மாத வாடகைக்கு பிடித்துக் கொள்ள முடியும். கட்டடத்தில் பல ஆபீசுகளை நிறுவ முடியும். இவற்றுக்கு எல்லாம் பொதுவான வசதிகளையும் உருவாக்கியுள்ளனர். காபி, டீ, சிற்றுண்டி, சாப்பாடு வரை அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். அறைகளில் உள்ள வண்ணங்களையும் நமது வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும். சிறிது சிறிதாக வளர்ச்சி பெற்று வரும் இந்த இணைப்பு அலுவலகங்களுக்கு கோவையில் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகள், பெரும் நகரங்களில் உள்ள நிறுவனங்கள் இங்கே இடம் பெற தொடங்கியுள்ளன. தகவல் தொழில்நுட்ப பூங்காவை போல, இங்கும் இவை செயல்பட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவை, கோவையின் வளர்ச்சியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.