ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் ரூ.7,000 கோடி வீட்டுக்கடன் இலக்கு
கோவை; கோவை சாய்பாபாகாலனி என்.எஸ். ஆர். சாலையில், புதுப்பிக்கப்பட்ட ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடந்தது.ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன தலைவர் தங்கராஜ், வங்கியின் தலைவர் சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்தனர். ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்தானம் கூறியதாவது: ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ், 13 மாநிலங்களில், 234 கிளைகளுடன் வீட்டுக் கடன் வழங்கிவருகிறது. இதுவரை, 5 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும், 15 ஆயிரத்து 300 வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து ஆவணங்களும் இருப்பின், 48 மணி நேரத்தில் வீட்டுக்கடன் வழங்கப்படும். 5 லட்சம் ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 430 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளோம். நடப்பாண்டு, 500 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவோம் என எதிர்பார்க்கிறோம்.இந்தாண்டு, 7,000 கோடி ரூபாய் வீட்டு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி ரூபாய் வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினர். ரெப்கோ வங்கியின் இயக்குனர் இன்னாசி, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் முரளிதரன், மண்டல திட்ட மேலாளர் சிஜூ, மண்டல மேலாளர் சிபி, சாய்பாபா காலனி கிளை மேலாளர் வில்லியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.