இலவச சைக்கிள் பொருத்தும் பணியை விடுமுறைக்குள் முடிக்க கோரிக்கை
கோவை: 2025-26ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில், 17,782 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மாணவிகளுக்கு ரூ.4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு ரூ.4,375 மதிப்பிலும் சைக்கிள் வழங்கப்படவுள்ளன. கோவை நகரம், எஸ்.எஸ். குளம், சூலூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. பெரியநாயக்கன்பாளையம், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, இன்னும் வினியோகம் தொடங்கவில்லை. தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிகளுக்கு தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 'ஜன.5ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. விடுமுறை நாட்களை பயன்படுத்தி சைக்கிள்களை தயார் செய்து முடிக்க வேண்டும்' என்றனர்.