5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு: 2 நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கோவை: கோவையில் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய இரு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் அறிக்கை: தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், மாவட்ட தடுப்புப்படையினர் இணைந்து, கடந்த ஜூன், ஆக., மாதங்களில், குழந்தைத் தொழிலாளர்கள், வளரிளம்பருவ தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 2 நிறுவனங்களில், 5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டனர். அந்த இரு நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கலெக்டர் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார் . 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 14 வயது முதல் 18 வயது பூர்த்தி அடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. அபாயகரமற்ற பணியில் ஈடுபடுத்தினாலும், அந்த நிறுவனங்கள் உரிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தினைச் சார்ந்த ஆய்வாளருக்கு அளிக்க வேண்டும். வளரிளம் பருவ தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். இதில், 3 மணி நேர பணிக்குப் பின் குறைந்தது 1 மணி நேர ஓய்வு இடைவெளி விட வேண்டும். ஓவர் டைம் பணியில் அமர்த்தக்கூடாது. இரவு 7:00 மணி முதல் காலை 8:00 மணி வரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்விதிமுறைகளை மீறும் நிறுவன உரிமையாளருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். புகார்களை 1098 மற்றும் 155214 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.