சிற்பி அறக்கட்டளை அருளரங்கம் விழா
பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரி, சிற்பி அறக்கட்டளை சார்பில், சிற்பி பாலசுப்ரமணியத்தின், 90வது பிறந்த நாள் விழாவையொட்டி அருளரங்கம் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசினார். சிற்பி பாலசுப்ரமணியம் வரவேற்றார். பழநி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார் பேசினார். மூலன் உரைத்த தமிழ் என்ற தலைப்பில், முனைவர் ஆறுமுக தமிழன், 'தமிழர்களின் அறிவு மரபு, உணர்ச்சிமரபையும் இணைக்கும் மந்திரமாக திருமந்திரம் உள்ளது' என விளக்கி பேசினார். முனைவர் ஞானசுந்தரம், 'ஆழ்வார்கள் தந்த அமுது' என்ற தலைப்பில், மாசற்ற அறிவுடையவர், பொருள் ஆழம் கொண்டவர், ஆழ வேண்டிய பொருளில் ஆழ்ந்தவர்கள் என ஆழ்வாார்கள் பற்றி விளக்கினார். 'திருவாசகம் எனும் தேன்' என்ற தலைப்பில் முனைவர் சுந்தரம் பேசினார். கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன் நன்றி கூறினார்.முன்னாள் துணை வேந்தர்கள் பொன்னுசாமி, சுப்ரமணியம், கல்லுாரி இயக்குனர் சரவணபாபு, புல முதன்மையர்கள் முத்துக்குமரன், உமாபதி பங்கேற்றனர்.